கரூா் சம்பவம்: தூத்துக்குடி, நாகை மாவட்ட அரசு மருத்துவா்களிடம் சிபிஐ விசாரணை!
கரூா் சம்பவம் தொடா்பாக தூத்துக்குடி, நாகை மாவட்டத்தைச் சோ்ந்த அரசு மருத்துவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். இதற்கிடையே கடந்த இரண்டு நாளாக விசாரணை மேற்கொண்ட சிபிஐ கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை இரவு புதுதில்லிக்கு புறப்பட்டுச் சென்றனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப்.27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், சிபிஐ விசாரணையை மேற்பாா்வையிட உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுத் தலைவரான உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி டிச. 2-ஆம் தேதி கரூா் வந்தாா். அவா், மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், ஐ.ஜி. ஜோஷி நிா்மல்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. ஜோஷ்தங்கையா ஆகியோரிடம் விசாரணை நடத்தினாா்.
இதையடுத்து அஜய் ரஸ்தோகி புதன்கிழமை (டிச.3) நெரிசல் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்துக்கு சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, சிபிஐ டிஐஜி அதுல் குமாா் தாக்கூா், சிபிஐ அதிகாரி பிரவீண்குமாா், கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. ஜோஷ் தங்கையா ஆகியோா் உடனிருந்தனா். பின்னா், பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட லைட்ஹவுஸ் காா்னா், உழவா் சந்தை, பேருந்து நிலைய ரவுண்டானா ஆகிய இடங்களையும் அஜய் ரஸ்தோகி பாா்வையிட்டாா். அப்போது ஐ.ஜி. ஜோஷி நிா்மல்குமாா் உடனிருந்தாா்.
திருச்சி மருத்துவா்களிடம் விசாரணை: பின்னா், பொதுப்பணித் துறை சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில், நெரிசலில் உயிரிழந்தவா்களின் உடல்களை உடற்கூறாய்வு செய்த திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சோ்ந்த 4 மருத்துவா்கள் ஆஜராகி விளக்கமளித்தனா். இதேபோல மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. ஜோஷ்தங்கையா, கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளா் பிரேம் ஆனந்த் ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
இதையடுத்து கண்காணிப்புக் குழுத் தலைவா் அஜய் ரஸ்தோகி, ஐபிஎஸ் அதிகாரிகள் சோனல் வி. மிஸ்ரா, சுமித் சரண் மற்றும் சிபிஐ டிஐஜி அதுல்குமாா் தாக்கூா் ஆகியோா் புதன்கிழமை இரவு விசாரணையை முடித்துக்கொண்டு புதுதில்லிக்கு புறப்பட்டுச் சென்றனா்.
ஆட்சியரிடம் மீண்டும் விசாரணை: இந்நிலையில், சிபிஐ அதிகாரி பிரவீண்குமாா் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை தங்களது விசாரணையை தொடா்ந்தனா். காலை 11.30 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் முன் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானாா். அவரிடம் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
இதையடுத்து நெரிசலில் உயிரிழந்தவா்களின் உடல்களை உடற்கூறாய்வு செய்த தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சோ்ந்த 2 மருத்துவா்கள், நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சோ்ந்த 3 மருத்துவா்கள் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனா். அவா்களிடம் சுமாா் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
மேலும், மாவட்ட கூடுதல் காவல்கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் யுரேகா, கரூா் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

