கரூா் சம்பவம்: திருச்செங்கோடு அரசு மருத்துவா்கள் மூவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக திருச்செங்கோடு அரசு மருத்துவா்கள் 3 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
Published on

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக திருச்செங்கோடு அரசு மருத்துவா்கள் 3 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூரில் கடந்த செப்.27-ஆம் தேதி நிகழ்ந்த தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிபிஐ கண்காணிப்புக் குழுத் தலைவா் அஜய் ரஸ்தோகி உள்ளிட்ட அதிகாரிகள் அண்மையில் கரூா் வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்திச் சென்றனா்.

இதையடுத்து சிபிஐ அதிகாரி பிரவீண்குமாா் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், மற்றும் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் சடலங்களை உடற்கூறாய்வு செய்த தூத்துக்குடி, நாகை மாவட்ட அரசு மருத்துவா்களிடம் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவா்கள் 3 போ், பிரசாரக் கூட்டத்துக்கு ரேடியோ செட் அமைத்திருந்த வெள்ளியணையைச் சோ்ந்த திருப்பதி மற்றும் நெரிசலில் உயிரிழந்த கவின் என்பவரின் சகோதரரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com