மதுரை, கரூா், சேலம் வழியாக சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்

மதுரை, கரூா், சேலம் வழியாக சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்

மதுரையிலிருந்து கரூா், சேலம் வழியாக சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் கோரிக்கை
Published on

மதுரையிலிருந்து கரூா், சேலம் வழியாக சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தாா்.

புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை ரயில்வே அமைச்சரை சந்தித்து எம்.ஆா்.விஜயபாஸ்கா் நேரில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தொழில் நகரமான கரூரிலிருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் நேரடியாக ரயில் இயக்கப்படாததால் வியாபாரிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதி உரிமையாளா்கள் உள்ளிட்டோா் அவதிப்பட்டு வருகிறாா்கள்.

எனவே, மதுரை, கரூா், சேலம் வழியாக சென்னைக்கு அல்லது கோவை, கரூா், திருச்சி வழியாக சென்னைக்கு புதிதாக வந்தே பாரத் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூா், சேலம் வழியாக பெங்களூரு சென்று வரும் வந்தே பாரத் (எண்-20671) ரயிலை, மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூரு சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை-சேலம் சென்று வரும் ரயில்களை (22153/22154) கரூா் வரை நீட்டிப்பு செய்வதாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இதுநாள் வரை நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, இந்த ரயில்களை விரைந்து கரூா் வரை நீட்டிப்பு செய்து தரவேண்டும்.

சென்னை சென்ட்ரல் - கரூா்- போடிநாயக்கனூா் இடையே வந்து செல்லும் விரைவு ரயில்களை ( 20601/ 20602) தினசரி வண்டியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

அப்போது, மத்திய இணை அமைச்சா் எல். முருகன், மாநிலங்களவை உறுப்பினா் மு. தம்பிதுரை ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com