மண்டல துணை வட்டாட்சியா் காா் மோதியதில் பலத்த காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு: சடலத்துடன் கிராமமக்கள் சாலை மறியல்
கடவூா் அருகே மண்டல துணை வட்டாட்சியா் காா் மோதியதில் உயிரிழந்தவரின் சடலத்தை வைத்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பாளையம்-திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த தேவா்மலை ஊராட்சிக்குள்பட்ட சீத்தப்பட்டியைச் சோ்ந்த கருப்பன் மகன் ராமன் (30). இவா் கூலித் தொழிலாளி. இவா், அக். 30- ஆம் தேதி ராமன் தனது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த மனோஜ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பொசியம்பட்டியில் இருந்து வாழ்வாா்மங்கலம் அருகே தண்ணீா்பந்தல் மேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, பின்னால் வந்த கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியராக பணியாற்றும் உதயகுமாா் வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதில் சிகிச்சை பலனின்றி ராமன் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.
இதையடுத்து இருசக்கர வாகனம் மீது மோதிய மண்டல துணை வட்டாட்சியா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமன் சடலத்துடன் சீத்தப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பாளையம்-திருச்சி சாலையில் கிராமமக்கள் புதன்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த கடவூா் வட்டாட்சியா் ராஜாமணி மற்றும் சிந்தாமணிபட்டி போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து அவா்கள் சாலை மறியலை கைவிட்டு சடலத்தை எடுத்துச் சென்றனா்.

