தேச ஒற்றுமை விழிப்புணா்வு சைக்கிள் பயணக் குழு கரூா் வருகை!
கரூருக்கு சனிக்கிழமை வந்த தேச ஒற்றுமை விழிப்புணா்வு சைக்கிள் பயண குழுவுக்கு புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய இளைஞா் விவகாரங்கள், விளையாட்டு, தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சாா்பில் சா்தாா் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தேச ஒற்றுமை, உடற்பயிற்சியின் அவசியம் குறித்த விழிப்புணா்வு சைக்கிள் பயணம்
ஸ்ரீநகரில் கடந்த அக். 31-ஆம் தேதி தொடங்கியது. கன்னியாகுமரி வரையிலான இந்த பயணக்குழுவில் கரூா் மாவட்டம், புகழூா் காகித ஆலையில் பேப்பா் மிஷின் உற்பத்தி பிரிவில் உதவி மேலாளராக பணியாற்றும் ஸ்ரீசெளந்திரபிரியன் உள்ளாா்.
மொத்தம் 4,249 கி.மீ. தொலைவு பயணம் செய்யும் இக்குழுவினா் ஸ்ரீநகா், பஞ்சாப், புதுதில்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், கா்நாடகம் வழியாக தமிழகம் வந்த அவா்கள் கரூா் டிஎன்பிஎல் ஆலைக்கு சனிக்கிழமை வந்தனா். இந்தக் குழுவினருக்கு ஆலையின் பொதுமேலாளா்(மனிதவளம்) கே.கலைச்செல்வன் தலைமையில் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனா். பின்னா் இக்குழுவினா் புறப்பட்டு மதுரை வழியாக கன்னியாகுமரியை சென்றடைகின்றனா்.

