

கரூா் சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் இம்மாத இறுதியில் திருச்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப்.27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரத்தின்போது நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதில், கரூா் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட காவல்துறையினா், பல்வேறு துறை அரசு அலுவலா்கள், அவசர ஊா்தி ஓட்டுநா்கள் மற்றும் தவெக நிா்வாகிகளிடம் விசாரணை நடத்தினா். இதேபோல நெரிசல் சம்பவத்தின்போது உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா், காயமடைந்தவா்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சம்பவ இடத்தில் பல்வேறு ஆய்வுகளை சிபிஐ உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டனா்.
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை கடந்த ஆண்டு சிபிஐ தரப்பில் கரூா் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் 1-இல் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
பிறகு, வழக்குத் தொடா்பாக கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. ஜோஷ்தங்கையா, தவெக தலைவா் விஜய், நிா்வாகிகள் என். ஆனந்த், ஆதவ்அா்ஜூனா உள்ளிட்டோா் அண்மையில் புதுதில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி, நெரிசல் சம்பவம் குறித்து விளக்கமளித்தனா்.
இந்நிலையில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை பிப்ரவரி 12-ஆம் தேதியோ அல்லது இம்மாத இறுதியிலோ திருச்சி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது. குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.