குடிநீர் பிரச்னை: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 12th April 2019 08:25 AM | Last Updated : 12th April 2019 08:25 AM | அ+அ அ- |

பெரம்பலூர் அருகே நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண கோரி, கிராம மக்கள் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் அருகே வேலூர் ஊராட்சிக்குள்பட்ட தம்பிரான்பட்டி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை குழாய் கிணற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன், அந்த ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுதடைந்தது. இதுதொடர்பாக கிராம மக்கள் புகார் அளித்ததையடுத்து மின் மோட்டாரை பழுது நீக்க எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இதுவரை மின் மோட்டாரை பழுது நீக்கி பொறுத்தாததால் இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனராம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பொதுமக்கள் கேட்டதற்கு, ஊராட்சியில் போதிய நிதியில்லை எனக் காரணம் கூறுகின்றனராம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள்தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யக் கோரி, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து முற்றுகையை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.