அரணாரை மாரியம்மன் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 15th May 2019 08:33 AM | Last Updated : 15th May 2019 08:33 AM | அ+அ அ- |

பெரம்பலூர் அருகேயுள்ள அரணாரை மாரியம்மன் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட அரணாரையில் உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த சில நாள்களாக சித்திரை திருவிழா நடைபெற்று வந்தது. திருவிழாவை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை முயல் வேட்டையும், திங்கள்கிழமை காலை பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதில், அரணாரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், தேரில் எழுந்தருளிய அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அரணாரையின் பிரதான வீதிகள் வழியாக இழுத்துச் செல்லப்பட்ட தேர், மாலையில் மீண்டும் நிலையை வந்தடைந்தது. திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.