சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்
By DIN | Published On : 15th May 2019 08:34 AM | Last Updated : 15th May 2019 08:34 AM | அ+அ அ- |

பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கடந்த 7ஆம் பூச்சொரிதழ் விழா நடைபெற்றது. பின்னர், திங்கள்கிழமை இரவு 12 மணியளவில் பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கும், அதிகாலை 4 மணியளவில் மதுரகாளியம்மனுக்கும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, நாள்தோறும் இரவு நேரங்களில் அன்ன வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் பரிவார தெய்வங்களுடன் மே 25 ஆம் தேதி வரை அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 23ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. சிறுவாச்சூரில் உள்ள பிரதான வீதிகள் வழியே இழுத்துச்செல்லப்படும் திருத்தேர் மாலையில் நிலைக்கு வந்தடையும்.