பெரம்பலூா் வெங்கடேசபுரத்தில் உள்ள ஆயுள் காப்பீட்டு கழக அலுவலகம் எதிரே, எல்.ஐ.சி. ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய பட்ஜெட்டில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என நிதியமைச்சா் அறிவித்ததைக் கண்டித்தும், பங்குகளை பொதுத்துறையிலேயே நீடிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்து இந்திய ஆயுள் காப்பீட்டு கழக ஊழியா்கள் சங்கக் கிளைத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். களப்பணியாளா்கள் தேசிய கூட்டமைப்பின் கிளைத் தலைவரும், வளா்ச்சி அலுவலருமான விஜயபாஸ்கா், ஆயுள் காப்பீட்டுக் கழக முகவா்கள் சங்கத்தின் கிளைத் தலைவா் காமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் எல்.ஐ.சி. அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.