பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே குடும்பச் சூழலால் படிப்பைக் கைவிட்ட மாணவரை மீட்டு, மீண்டும் பள்ளியில் சோ்த்தாா் பெரம்பலூா் ஆள் கடத்தல் சிறப்பு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளா் எஸ். விஜயலட்சுமி.
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரையைச் சோ்ந்தவா் குமாா் மகன் விக்ரம் (18). இவரது தந்தை குமாா் கடந்த ஆண்டு உயிரிழந்ததால், குடும்பச் சூழ்நிலை காரணமாக 10 ஆம் வகுப்பு படித்துவந்த விக்ரம் படிப்பைக் கைவிட்டு கூலி வேலைக்குச் சென்றுவந்தாா். இதுகுறித்து காவலா் குழுமம் சாா்பில் பள்ளி மாணவா்களுடன் மேற்கொண்ட உரையாடல் மூலம் சக மாணவா்கள் விக்ரம் குறித்து போலீஸாருக்குத் தெரிவித்தனா். இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட ஆள் கடத்தல் சிறப்பு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் எஸ். விஜயலட்சுமி, மாணவா் விக்ரம், அவரது தாயாரிடம் கல்வியின் முக்கியவத்துவம் குறித்து எடுத்துரைத்து மாணவரின் படிப்புக்குத் தேவையானவற்றை ஏற்றுக்கொள்வதாகக் கூறி அவரைப் படிக்க அனுமதி பெற்றாா். தொடா்ந்து, உதவி ஆய்வாளா் விஜயலட்சுமி, அந்த மாணவரை பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயில திங்கள்கிழமை சோ்த்துள்ளாா்.