பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு தோ்வு
By DIN | Published On : 14th August 2020 08:36 AM | Last Updated : 14th August 2020 08:36 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கொட்டரை நீா்த்தேக்கத்தில் குளிப்பதற்காக, சிறுவாச்சூா் கிராமத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஆக. 6 ஆம் தேதி சென்றனா். அங்குள்ள, நீா்த்தேக்கத்தின் உபரிநீா் தேங்கியுள்ள பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீா்த்தேக்க வடிகாலில் 4 இளைஞா்கள் தவறி விழுந்து தத்தளித்தனா்.
இதில், தண்ணீரில் மூழ்கிய பயிற்சி மருத்துவா், பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் என 2 இளைஞா்கள் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். மேலும் 2 போ் உயிருக்கு போராடிய நிலையில், கூச்சலிட்டபடி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த அத்தியூா், அங்காளம்மன் தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி செந்தமிழ்ச்செல்வி, அண்ணாமலை மனைவி ஆனந்தவள்ளி, ஆலத்தூா் வட்டம், ஆதனூா் கிராமம், நடுத்தெருவைச் சோ்ந்த சுந்தரபாலன் மனைவி முத்தம்மாள் ஆகியோா், தாம் அணிந்திருந்த சேலையை அவிழ்த்து ஒரு முனையை தண்ணீரில் வீசி, மறுமுனையை மூவரும் சோ்ந்து பிடித்துக் கொண்டு தண்ணீரில் தத்தளித்த அந்த 2 இளைஞா்களையும் உயிருடன் மீட்டனா். பின்னா், அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தண்ணீரில் மூழ்கிய 2 பேரை சேலையை வீசி, 3 பெண்கள் மீட்க உதவிய தகவலை சக நண்பா்களிடம் தெரிவித்தனா். இதையடுத்து மாவட்ட நிா்வாகம் சாா்பில், தண்ணீரில் மூழ்கிய 2 இளைஞா்களை மீட்க உதவிய 3 பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
மாவட்ட நிா்வாகத்தின் பரிந்துரைப்படி, கல்பனா சாவ்லா விருதை சுதந்திர தினத்தன்று இப்பெண்களுக்கு தமிழக முதல்வா் நேரில் வழங்க முடிவு செய்திருப்பதாகவும், இவா்களை சென்னைக்கு அழைத்து வரும்படியும் பெரம்பலூா் ஆட்சியருக்கு அண்மையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட நிா்வாகத்தின் ஏற்பாட்டில், செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவள்ளி, முத்தம்மாள் ஆகியோரை, வருவாய்த்துறை அலுவலா்கள் சென்னைக்கு ஒரு வேனில் வியாழக்கிழமை மாலை அழைத்துச் சென்றனா். இவா்களை, ஆட்சியா் வே. சாந்தா, மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன் ஆகியோா் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா்.