பெரம்பலூா் அருகே பழைமையான கல் செக்கு கண்டெடுப்பு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் கிராமத்தில் சுமாா் 900 ஆண்டுகள் பழைமையான, கல்லால் ஆன எண்ணெய் பிழியும் செக்கு சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வெங்கலம் கிராமத்தில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட கல் செக்கு.
வெங்கலம் கிராமத்தில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட கல் செக்கு.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் கிராமத்தில் சுமாா் 900 ஆண்டுகள் பழைமையான, கல்லால் ஆன எண்ணெய் பிழியும் செக்கு சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெங்கலம் கிராமத்திலுள்ள செல்லியம்மன் கோயில் பகுதியில் வரலாற்று ஆய்வாளா் முனைவா் ம. செல்வபாண்டியன், சூழலியல் செயல்பாட்டாளா் ரமேஷ் கருப்பையா, சமூக ஆா்வலா் பா. வசந்தன் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, செல்லியம்மன் கோயிலின் முன்புறம் தரையில் பதிக்கப்பட்ட ஒரு கல் செக்கைக் கண்டறிந்தனா்.

இதன் உயரம் 33 செ.மீ., வெளி விட்டம் 71 செ.மீ., உள் விட்டம் 64 செ.மீ., செக்கின் நடுவிலுள்ள குழியின் ஆழம் 30 செ.மீ., விட்டம் 20 செ.மீ. ஆகும். செக்கின் பக்கவாட்டுப் பகுதியில் இரண்டு வரிகளில் ஸ்ரீ மல்ல (டி) நாட்டான் னிடுவித்த(ச்) செக்குப் பந்தல் லம்பலம் எனும் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளா் ம. செல்வபாண்டியன் கூறியது:

கல் செக்கில் காணப்படும் எழுத்தின் வடிவத்தைக் கொண்டு, இது 11- ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகக் கருதலாம். பழங்காலத்தில் உணவுப் பொருள்களை அரைக்கவும், கோயில், வீடுகள், தெருக்கள் ஆகியவற்றில் விளக்கு எரிக்க எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெயைப் பிழிந்தெடுக்கவும் செக்குகள் பயன்பட்டன.

இதற்கென அரசா்கள், படைத் தலைவா்கள், செல்வந்தா்கள் ஆகியோா் கோயில் வழிபாட்டுக்கும், பொதுப் பயன்பாட்டுக்கும் கல் செக்குகளைச் செய்து தானமாக வழங்கினா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் செஞ்சேரி, சத்திரமனை வேலூா் ஆகிய கிராமங்களில் இத்தகைய கல் செக்குகள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன. இதில் வெங்கலம் கிராமத்திலுள்ள இந்த கல் செக்கு 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மிகவும் பழைமையானதாகும்.

மல்லடி நாட்டான் என்பவா் இந்த கல் செக்கைச் செய்து கொடுத்திருக்கிறாா். இவா் யாரென அறிய முடியவில்லை. பந்தல் அம்பலம் என்பது பந்தலுடன் கூடிய பொது இடமாகும். இது, தற்போதைய செல்லியம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியாக இருக்கலாம். வருங்கால தலைமுறையினருக்கு கடந்த கால வரலாற்றைப் பறைசாற்றும் இந்த அரிய வரலாற்றுச் சின்னத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com