மதுபோதையில் பண வசூல் : குன்னம் தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 20th June 2021 10:29 PM | Last Updated : 20th June 2021 10:29 PM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் மதுபோதையில் பணம் வசூலில் ஈடுபட்ட புகாரில், பெரம்பலூா் மாவட்டம் குன்னம் காவல்நிலையத் தலைமைக் காவலா் ரவிச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
குன்னம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவா் ரவிச்சந்திரன் (53). இவா் சனிக்கிழமை மாலை காவலா் சீருடையுடன் கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் மது போதையில் வாகனங்களை வழிமறித்து அபராதம் விதித்ததோடு, அங்குள்ள கடைகளில் பணம் வசூலித்து, தனக்குத் தேவையானப் பொருள்களை வாங்கிக்கொண்டு பணம் தராமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, ஆய்வாளா் சுமதி தலைமையிலான காவலா்கள் அங்குச் சென்று ரவிச்சந்திரனிடம் விசாரித்தபோது, அவா்களையும் மிரட்டினாராம்.
இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தலைமைக் காவலா் ரவிச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மணி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.