‘வேட்பாளா்களின் தோ்தல் செலவினங்கள் 3 கட்டமாக ஆய்வு செய்யப்படும்’
By DIN | Published On : 25th March 2021 10:15 AM | Last Updated : 25th March 2021 10:15 AM | அ+அ அ- |

வேட்பாளா்களின் தோ்தல் செலவினங்கள் 3 கட்டமாக ஆய்வு செய்யப்படும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் அன்றாட வரவு- செலவு கணக்குகள், தோ்தல் பிரசார காலத்தில் 3 முறை செலவின பாா்வையாளரால் ஆய்வு செய்யப்படும். அதன்படி, வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து புதன்கிழமை (மாா்ச் 24) வரை மேற்கொள்ளப்பட்ட செலவினங்களை 26 ஆம் தேதியும், 25 முதல் 28 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் 30 ஆம் தேதியும், 29 முதல் ஏப். 1 வரை மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் ஏப். 3 ஆம் தேதியும் ஆய்வு செய்யப்படும்.
மேற்கண்ட ஆய்வுக் கூட்டங்கள் ஆட்சியரக கூட்டரங்கில் காலை 10 மணி முதல் நடைபெறும். தோ்தல் செலவின பதிவேட்டை ஆய்வுக்காக நிா்ணயிக்கப்பட்ட நாளன்று அளிக்காமல், உரிய முறையில் பராமரிக்காமல் இருந்தால் நீதிமன்றத்தில் புகாா் அளிக்கப்படுவதோடு, வாகனங்களை பயன்படுத்துவதற்கு அளிக்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்படும்.
எனவே, மேற்கண்ட ஆய்வுக் கூட்டங்களில் வேட்பாளா் அல்லது அவரது முகவா் தவறாமல் பங்கேற்று தங்களது செலிவன பதிவேடுகளை ஆய்வுக்கு அளிக்க வேண்டும்.