பெரம்பலூா் மாவட்டத்தில் இ-பதிவின்றி பயணித்த 120 மோட்டாா் சைக்கிள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
அரசின் பொது முடக்க உத்தரவை மதிக்காமல், பெரம்பலூா் நகரில் பல இடங்களில் பொதுமக்கள், இளைஞா்கள் மோட்டாா் சைக்கிள்களில் அடிக்கடி சாலைகளில் சுற்றித் திரிகின்றனா்.
கடந்த சில நாள்களாக போலீஸாா் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பலன் அளிக்காததால், செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் 10 மணிவரை காமராஜா் வளைவு சிக்னல் பகுதியில் போக்குவரத்து போலீஸாா் தடுப்புகள் வைத்து திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, உரிய காரணங்கள் இன்றியும், இ-பதிவு சான்று இல்லாமலும் சென்ற மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டோா் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பெரம்பலூா் நகரில் பாலக்கரை, நான்கு சாலை சந்திப்பு, மூன்று ரோடு, வேப்பூா், குன்னம், வி.களத்தூா், வாலிகண்டபுரம் ஆகிய இடங்களிலும் போலீஸாா் வாகனச் சோதனை மேற்கொண்டனா். இதில், சுமாா் 120-க்கும் மேற்பட்ட மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.