ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 25th August 2022 10:59 PM | Last Updated : 25th August 2022 10:59 PM | அ+அ அ- |

பெரம்பலூா், துறைமங்கலத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை எதிரே, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற பணியாளா்கள் மற்றும் ஓய்வூதியா் நலச் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் மருதமுத்து தலைமை வகித்தாா்.
ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையில், ஓய்வுபெற்ற பணியாளா்கள் சங்கத்தை அழைக்க வேண்டும். தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்த காலம் 3 ஆண்டுகளாக இருந்ததை 4 ஆண்டு காலமாக மாற்றியதை திரும்பப் பெற வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.
இதில், அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளா்கள் மற்றும் ஓய்வூதியா் நலச் சங்கத்தை சோ்ந்த பலா் கலந்துகொண்டனா்.
அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்...
துறைமங்கலத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை எதிரே, அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியூ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளைச் செயலா் செல்வகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்த காலம் 4 ஆண்டு காலமாக மாற்றியதைக் கண்டித்தும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதில், போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.