பெரம்பலூரில் நாளை பெண்களுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 19th October 2022 12:45 AM | Last Updated : 19th October 2022 12:45 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், பெண்களுக்கான சிறப்பு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை (அக். 20) நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஒசூா் ஆலையில் 1,000-க்கும் மேற்பட்ட பெண்கள் இளநிலை தொழில் நிபுணா் பதவிக்கு தோ்வு செய்யப்பட உள்ளனா். இந் நிறுவனத்தில், 18 முதல் 20 வயது வரையுள்ள பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற பெண்களுக்கு பயிற்சியுடன் கூடிய ஊதியமாக மாதம் ரூ. 16,500 வழங்கப்படும். மேலும், தோ்வு செய்யப்படுவோருக்கு உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி செய்து தரப்படும்.
இப் பதவிக்கான நோ்காணல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். எனவே, இம் முகாமில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற பெண்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை 94990 55913 என்னும் எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.