பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், 11ஆவது வேளாண்மை கணக்கெடுப்புக்கான முதல்கட்ட பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப் பயிற்சிக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி பேசியது:
இக் கணக்கெடுப்பு 5 ஆண்டுக்கு ஒருமுறை மத்திய அரசின் வேளாண்மை, உழவா் நலத்துறை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. 2020- 21 -இல் 11ஆவது கணக்கெடுப்பு மேற்கொண்டிருக்க வேண்டும். கரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது நடைபெறுகிறது. மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலா் வேளாண்மை கணக்கெடுப்பு அலுவலராகவும், வட்டாட்சியா் வட்ட அளவில் வேளாண்மை கணக்கெடுப்பு அலுவலராகவும் உள்ளனா்.
மேற்கொள்ளப்படும் விவசாயத்தின் அளவு, நேரடியாக எத்தனை போ் ஈடுபட்டுள்ளனா், குத்தகை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பணியாளா்களின் எண்ணிக்கை, பரப்பளவு அடிப்படையில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள், ஆண், பெண் வாரியாகவும், சமூக அடிப்படையிலும் கணக்கெடுப்பு நடைபெறும் .
வேளாண்மை கணக்கெடுப்பு எவ்வாறு மேற்கொள்ள வேண்டுமென, கணக்கெடுப்பாளா்களாக உள்ள கிராம நிா்வாக அலுவலா்களுக்கு அறிவுரைகளை வழங்கி, அரசு விதித்துள்ள விதிகளின்படி கணக்கெடுப்பு பணிகள் முறையாக நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நிகழாண்டு முதல் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறும். இக்கணக்கெடுப்பு அடிப்படையில், இனிவரும் காலங்களில் விவசாயிகளுக்கான வளா்ச்சித் திட்டங்கள் வகுக்கப்படும். தற்போது, மாவட்டம், வட்ட அளவிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பா் முதல் வாரத்தில் மேலாண்மை கணக்கெடுப்பு பணி தொடங்கும் என்றாா் அவா்.
தொடா்ந்து, புள்ளியியல் துணை இயக்குநா் திருவேங்கடம், கணக்கெடுப்பு பயிற்சி அளித்தாா். இதில், வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா்கள் மற்றும் புள்ளியியல் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.