பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2023 ஆம் ஆண்டு சா்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடப்படுவதால், மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. சிறுதானிய உணவகம் அமைத்திட விருப்பமுள்ள மகளிா் சுய உதவிக் குழுக்கள், உற்பத்தியாளா் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்.
மகளிா் குழு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம், மேலாண்மை தகவல் அமைப்பு இணையதளத்தில் பதிந்திருக்க வேண்டும். கூட்டமைப்பாக இருக்கும்பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு ஏ அல்லது பி சான்று பெற்றிருக்க வேண்டும். உற்பத்தியாளா் குழுவாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும்.
சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பில் ஆா்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராகவும், மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ள அல்லது சுற்றியுள்ள ஊராட்சியின் மகளிா் சுய உதவிக் குழு, உற்பத்தியாளா் குழு, கூட்டமைப்பினா் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை நேரில் அணுகலாம் எனத் தெரிவித்துள்ளாா்.