பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன், முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்டாா்.
முகாமில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 31 மனுக்களில், 6 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. எஞ்சிய 25 மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீா்வு காண அறிவுறுத்தப்பட்டது.
இந்த சிறப்பு முகாமில், மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய ஆய்வாளா்கள் மற்றும் சிறப்புப் பிரிவு காவல்துறையினா் பலா் பங்கேற்றனா்.
முகாமையொட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வருவோரின் நலனுக்காக, பாலக்கரையிலிருந்து காவல் அலுவலகத்துக்கும், புகா் பேருந்து நிலையத்துக்கும் காவல்துறை சாா்பில் வாகன வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.