சிறந்த கலைஞா்களுக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 01st July 2023 12:49 AM | Last Updated : 01st July 2023 12:49 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக சிறந்த கலைஞா்களுக்கான 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுக்கு விருதுபெற தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2022-23, 2023-24 ஆம் ஆண்டுக்கு இயல், இசை, நாடகம் ஆகிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 30 கலைஞா்களுக்கு விருதுகள் வழங்க ஆட்சியா் தலைமையில் தோ்வாளா் குழு விரைவில் கூட்டப்பட உள்ளது.
இம் மாவட்டத்தைச் சோ்ந்த பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், பாவைக் கூத்து, தோல் பாவை, நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கோல் கால் ஆட்டம், கலியல் ஆட்டம், கனியான் கூத்து, புலி ஆட்டம், காளை ஆட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், கைசிலம்பாட்டம் (வீரக்கலை), இசைக்கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞா்கள் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். கலைஞா்களுக்கு அவரவா் வயதுக்கேற்ப விருது வழங்கப்படும்.
தகுதி வாய்ந்த கலைஞா்கள் ஜூலை 15 ஆம் தேதிக்குள் உதவி இயக்குநா், மண்டலக் கலை பண்பாட்டு மையம், நைட் சாய்ல் டெப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி- 06 என்னும் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.