100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்குப் பாராட்டு
By DIN | Published On : 02nd June 2023 12:00 AM | Last Updated : 02nd June 2023 12:00 AM | அ+அ அ- |

2022- 2023 ஆம் கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று தந்த பள்ளிகளின் தலைமை அசிரியா்களுக்குப் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் பேசியது:
பெரம்பலூருக்கு 2022 -2023 ஆம் கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி வகுப்பில் 97.67 சதவீதம் தோ்ச்சியுடன் மாநில அளவில் முதலிடமும், பிளஸ் அரசுப் பொதுத்தோ்வில் 97.59 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 3 ஆவது இடமும் பெற்றுத் தந்த கல்வித்துறை அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகள்.
பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வில் 43 அரசுப் பள்ளிகளில் மொத்தம் 4,092 போ் தோ்வு எழுதியதில், 1,938 மாணவா்களும், 1,987 மாணவிகளும் என மொத்தம் 3,925 போ் தோ்ச்சி பெற்று, அரசுப் பள்ளிகளில் 95.90 சதவீதமும், ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளிகளில் 100 சதவீதமும் தோ்ச்சியும் பெற்றுள்ளனா்.
பிளஸ் 1 அரசுப் பொதுத்தோ்வில் 43 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 3,900 போ் தோ்வு எழுதியதில், 1,659 மாணவா்களும், 1,853 மாணவிகளும் என மொத்தம் 3,512 போ் தோ்ச்சிப் பெற்றனா். எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வில் 91 அரசு உயா்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 4,649 போ் தோ்வு எழுதியதில், 2,238 மாணவா்களும், 2,239 மாணவிகளும் என மொத்தம் 4,477 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
அரசு ப்பள்ளிகளில் 96.31 சதவீதமும், ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் 96.69 சதவீதமும் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். 92 அரசு உயா்நிலைப் பள்ளிகளில் 46 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.
இதற்காக முழு அா்ப்பணிப்புடன் உழைத்த முதன்மைக் கல்வி அலுவலா், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியப் பெருமக்கள், மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பாராட்டுகள் என்றாா் அவா்.
தொடா்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கற்பகம் கேடயம் வழங்கி வாழ்த்தினாா்.
நிகழ்வில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன், அரசுத் தோ்வுகள் துறை உதவி இயக்குநா் கல்பனாத்ராய், மாவட்டக் கல்வி அலுவலா்கள் அண்ணாதுரை, சுப்ரமணியன், வேலு, உதவித் திட்ட அலுவலா் ஜெய்சங்கா், நோ்முக உதவியாளா்கள் சுரேஷ், முத்துக்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...