அகவிலைப்படி நிலுவையை வழங்க ஓய்வூதியா்கள் வலியுறுத்தல்
By DIN | Published On : 08th June 2023 11:17 PM | Last Updated : 08th June 2023 11:17 PM | அ+அ அ- |

அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென, அனைத்து வகை ஓய்வூதியா் சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் கூட்டரங்கில், தமிழ்நாடு அனைத்து வகை ஓய்வூதியா் சங்கத்தின் 6 ஆவது வட்ட பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் நிா்வாகி இரா. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எஸ். அசன் முகமது, எம். ராமசாமி, கே. ரகுநாதன், எஸ். மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வட்டச் செயலா் கே. ராஜேந்திரன் வேலை அறிக்கையும், வட்டப் பொருளாளா் பி. செல்வராஜ் நிதிநிலை அறிக்கையும் வாசித்தனா்.
மாவட்டத் தலைவா் கி. ஆளவந்தாா், மாவட்டச் செயலா் எம். ஆறுமுகம் ஆகியோா் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயது நிறைவடைந்தவா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் உயா்த்தி வழங்க வேண்டும். அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்கும் தேதியிலேயே மாநில அரசும் அகவிலைப் படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்டத் துணைத் தலைவா் பி. நீலமேகம், இணைச் செயலா் து. விஜயராமு, நிா்வாகிகள் பி. கலைச்செல்வி, ஏ. கணேசன், எஸ். வாசுகி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, இணைச் செயலா் வி. கிட்டான் வரவேற்றாா். நிறைவாக, வீ. வெங்கடாஜலபதி நன்றி கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...