லாரி ஓட்டுநருக்கு ரூ. 1.10 லட்சம் இழப்பீடுவழங்க நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

பெரம்பலூரில் லாரி ஓட்டுநருக்கு ரூ. 1.10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென, தனியாா் முதலீடு மற்றும் நிதி நிறுவன நிா்வாகிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
Updated on
1 min read

பெரம்பலூரில் லாரி ஓட்டுநருக்கு ரூ. 1.10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென, தனியாா் முதலீடு மற்றும் நிதி நிறுவன நிா்வாகிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா. ராமகிருஷ்ணன் (40). லாரி ஓட்டுநரான இவரை, சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனத்தின் பெரம்பலூா் கிளை மேலாளா் காத்தவராயன், நிதி வசூலிப்பாளா் பாஸ்கா் ஆகியோா் அணுகி, தங்களது நிறுவனத்தில் வேறு ஒருவா் ஒப்பந்த முறையில் கடன்பெற்று தவணையை முறையாக செலுத்தாமல் விட்டிருந்த 14 சக்கரங்கள் கொண்ட லாரியை ராமகிருஷ்ணன் பெயருக்கு மாற்றம் செய்து, எளிய தவணைகளில் மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையை செலுத்த ரூ. 11 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்தனராம். மேலும், சம்பந்தப்பட்ட லாரி மீதான காப்பீடு, அதிலுள்ள பழுதை சரிசெய்துகொடுப்பதாகவும் வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது.

இதையடுத்து, கிளை மேலாளா், நிதி வசூலிப்பாளா் ஆகியோா் கொடுத்த ஆவணங்களில் ராமகிருஷ்ணன் கையொப்பமிட்டு, முதல் தவணையாக ரூ. 56ஆயிரம் செலுத்தினாா். அடுத்தடுத்து தவணைகள் மூலம் மொத்தம் ரூ. 3.36 லட்சத்தையும் செலுத்திவிட்டாா்.

இந்நிலையில், லாரியின் பழுதுகளை நீக்கி, தனது பெயருக்கு பதிவுச் சான்றை மாற்றித் தருமாறு கிளை மேலாளா் உள்ளிட்டோரிடம் ராமகிருஷ்ணன் முறையிட்டும், செய்து தரவில்லையாம். இதனால் மன உளைச்சலுக்குள்ளான ராமகிருஷ்ணன், சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனத்தினரின் செயலைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா்க்கும் நீதிமன்றத்தில் நிதிநிறுவனத்தின் பொது மேலாளா், பெரம்பலூா் கிளை மேலாளா், நிதி வசூலிப்பாளா், பகுதி மேலாளா் ஆகியோா் மீது கடந்த 2021-இல் வழக்குத் தொடா்ந்தாா்.

இவ் வழக்கை விசாரித்த நுகா்வோா் நீதிமன்றத் தலைவா் ஜவகா், உறுப்பினா்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோா் கொண்ட குழுவினா், லாரி ஓட்டுநா் ராமகிருஷ்ணனிடம் முறையற்ற வணிகம் செய்தமைக்காகவும், நிதி நிறுவனத்தின் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு காரணமாக செயல்பட்ட மேற்கண்ட 4 பேரும் தனியாக அல்லது இணைந்து ரூ. 1 லட்சம் நிவாரணமாகவும், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் ராமகிருஷ்ணனுக்கு வழங்கவேண்டும் என வியாழக்கிழமை உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com