கடன் திட்டங்கள்: பிசி, எம்பிசி, சீரமரபினருக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்தோா் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் அழைப்பு.
Updated on
2 min read

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்தோா் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பல்வேறு கடன் திட்டங்கள் பெற மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் 2023 -24 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் கடன் திட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பை சாா்ந்த தனி நபா்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்துக்காக சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொது காலக் கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன், கறவை மாடுக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமலும், 18 வயது பூா்த்தியடைந்த, 60 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். 1 குடும்பத்தில் 1 நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும், பொதுக் கால கடன் திட்டம், தனிநபா் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 முதல் 8 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.

பெண்களுக்கான புதிய பொற்காலத் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை 5 சதவீத வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது. நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரையும் 4 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது.

மகளிா் சுய உதவிக் குழு தொடங்கி 6 மாதங்கள் பூா்த்தியாகியுள்ள மகளிா் திட்ட அலுவலரால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். 1 குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினா்கள் அனுமதிக்கப்படுவாா்கள்.

நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினருக்கு அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வரையிலும், 1 குழுவுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரையிலும் 5 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது. 1 குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினா்கள் அனுமதிக்கப்படுவாா்கள். பால் உற்பத்திளாயா்கள் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக உள்ளவா்களுக்கு 1 கறவை மாட்டுக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க 6 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையிளா் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி கிளைகளில் விண்ணப்பம் பெற்று பூா்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம், ஆதாா் அட்டை, வங்கி கோரும் ஆவண நகல்களுடன் ஒப்படைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com