பெரம்பலூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம்
பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், பெரம்பலூரிலுள்ள கெளதம புத்தா் சிறப்பு உயா்நிலைப் பள்ளியில், உலக மாற்றுத்திறனாளிகள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஏ. சரண்யா பேசியது:
மாற்றுத்திறனாளிகள் மற்றவா்களைப் போல சிறந்த திறமையாளா்களாக உருவாக வேண்டும். நல்ல பழக்கவழக்கங்களை வளா்த்துக் கொள்ளவேண்டும். வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. மாற்றுத்திறனாளி மாணவா்கள் நன்கு படித்து அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் எல். ஷாகுல் ஹமீது மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து கூறி, வழிகாட்டி புத்தகம் வழங்கி, அவா்களின் கல்வி, நலன், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.
இதில், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் தமிழ்பாக்கியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வி. சீனிவாசன் உள்பட 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
நிறைவாக, பள்ளி தாளாளா் லில்லி கோபிநாத் நன்றி கூறினாா்.

