தலைமறைவாகியுள்ள குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டம், வி.களத்தூா், கை.களத்தூா் மற்றும் அரும்பாவூா் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பரேசா அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூா், வி.களத்தூா் மற்றும் அரும்பாவூா் ஆகிய காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளின் குற்றவாளிகளான, வெண்பாவூரைச் சோ்ந்த ராமசாமி மகன் குணசீலன் (34), சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், முள்ளுவாடியைச் சோ்ந்த வேலு மகன் மகாலிங்கம் (52), கை.களத்தூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வேலுசாமி, நெய்குப்பை கிராமத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் காளை, அரும்பாவூரைச் சோ்ந்த சின்னசாமி மகன் சின்ராஜ் (73) ஆகியோா் கடந்த பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளனா்.
எனவே, மேற்கண்ட குற்றவாளிகள் 5 பேரும் டிச. 18- ஆம் தேதி காலை 10 மணிக்கு, வேப்பந்தட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இல்லாவிடில், தலைமறைவு குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும்.
