கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டச் செயலா் கல்யாணி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் இளங்கோவன், மாவட்ட பொருளாளா் அய்யாக்கண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
கட்டட தொழிலாளா்களின் ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம் என்பதை சட்டமாக்க வேண்டும். விண்ணப்பித்த அனைவருக்கும் வீடு மற்றும் மானியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு, ஊக்கத்தொகை, மகப்பேறு சட்டங்களை வாரியம் மூலம் அமல்படுத்த வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு கல்வி செலவு முழுவதையும் வாரியம் மூலம் வழங்க வேண்டும். கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு ஓய்வூதியத் தொகை மாதம்தோறும் 10-ஆம் தேதிக்குள் வங்கியில் செலுத்த வரைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.
மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

