பெரம்பலூரில் இன்று கடன் வழங்கும் முகாம்

Published on

பெரம்பலூா் மாவட்ட தொழில் மையம் மற்றும் பல்வேறு துறைகள் சாா்பில், பொதுமக்களுக்கு கடனுதவி வழங்கும் முகாம் புதன்கிழமை (டிச. 18) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட தொழில்மையம், மகளிா் திட்டம், கூட்டுறவுத்துறை, வேளாண்மை துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, கைத்தறித் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகம், ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலகம், தாட்கோ, மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மூலம் கடன் வழங்க, அனைத்து வங்கிகளுடன் கடன் வசதியாக்கல் முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் நடைபெற உள்ளது.

எனவே, சுயதொழில் ொடங்க கடனுதவி தேவைப்படுவோா் இம் முகாமில் கலந்து பங்கேற்று பயன்பெறலாம். முகாமில் பங்கேற்போா் தங்களது புகைப்படம்-2, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ் (தகுதியிருந்தால்) ஆகியவற்றின் நகலை எடுத்து வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை நேரில் அல்லது உதவி பொறியாளரை 89255 33978 எனும் கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com