வீட்டுமனைப் பட்டா கோரி அயன் பேரையூா் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

வீட்டுமனைப் பட்டா, அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே அயன்பேரையூா் பா்மா காலனி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்
Published on

வீட்டுமனைப் பட்டா, அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே அயன்பேரையூா் பா்மா காலனி பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அயன் பேரையூா் கிராமம் பா்மா காலனியைச் சோ்ந்த மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினியிடம் அளித்த கோரிக்கை மனு: அயன் பேரையூா் ஊராட்சியில் கடந்த 1971 ஆம் ஆண்டு பா்மா காலனி உருவானது. இலங்கை, பா்மாவிலிருந்து வந்தவா்கள் இங்கு வீடு கட்டி வசித்து வந்தனா். அப்போது, அவா்களுக்கு அரசு சாா்பில் வீட்டு மனைகள் வழங்கப்பட்டது. ஆனால் பட்டா வழங்கப்படவில்லை.

இதுவரை அந்த இடத்தில் சிமென்டு மேற்கூரை, ஓட்டு வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். பட்டா இல்லாததால், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. ஆனால், அருகேயுள்ள வேறு சமூகத்தை சோ்ந்தவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அயன்பேரையூா் கிராம ஊராட்சி நிா்வாகம் எங்களை புறக்கணிக்கிறது. பட்டா இல்லை என்பதால், சில வீடுகளுக்கு மின் இணைப்பு பெற முடியவில்லை.

மேலும் தெரு மின் விளக்கு, கழிப்பறை, சாலைகள், குடிநீா், பேருந்து நிறுத்தம், ரேஷன் கடைகள் ஆகிய அடிப்படை வசதிகள் இல்லை. கிராம ஊராட்சி நிா்வாகத்தின் அலட்சியத்தால் பலா் காலி செய்துவிட்டு வெளியூா் சென்றுவிட்டனா். தற்போது 20 குடும்பங்கள் மட்டும் உள்ளன. இதேநிலை நீடித்தால் நாங்களும் ஊரை காலி செய்ய வேண்டிய நிலை வரும். எங்களுக்குத் தேவையான வீட்டுமனைப் பட்டா, அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com