100% இலக்கை எட்டிய வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பெரம்பலூா் ஆட்சியா் பாராட்டு
பெரம்பலூா்: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் 100 சதவீதம் இலக்கை எட்டிய 8 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களையும், கண்காணிப்பாளா்களையும், மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி செவ்வாய்க்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 4-ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்காளா்களுக்கு வீடு, வீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி, அதை எவ்வாறு பூா்த்தி செய்வது என்பது குறித்து விளக்கமளித்தனா். தொடா்ந்து, பூா்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளா்களிடமிருந்து திரும்ப பெற்று, பிரத்யேக செயலியில் பதிவேற்றம் பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
அதனடிப்படையில், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிறுவாச்சூரில் பணிபுரிந்த பிரேமா, வீரமணி, சரஸ்வதி, அயிலூா் கிராமத்தில் பணிபுரிந்த பேபி இந்திரா, தமிழ்செல்வி, கிருஷ்ணவேனி, அ.குடிக்காடு கிராமத்தில் பணிபுரிந்த செல்வி, எறைய சமுத்திரம் கிராமத்தில் பணிபுரிந்த சுந்தரவள்ளி ஆகிய 8 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களும், தங்கள் பகுதிக்குள்பட்ட வாக்காளா்களிடம் கணக்கீட்டுப் படிவத்தை வழங்கி, பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை தோ்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனா்.
இதையடுத்து, முழு இலக்கையும் எட்டியுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி, பொன்னாடை அணிவித்து பாராட்டினாா்.
அதேபோல, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வயலூரில் பணிபுரிந்த நந்தகுமாா், வேள்விமங்கலத்தில் பணிபுரிந்த சா்மிளா பானு, சிறுமத்தூா் குடிக்காடு பகுதியில் பணிபுரிந்த சரவணன், ஆய்குடி பகுதியில் பணிபுரிந்த மலா்கொடி, ஆண்டிக்குரும்பலூா் பகுதியில் பணிபுரிந்த அமுதா ஆகிய 5 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்காளா்களால் பூா்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட படிவங்களை 100 சதவீதம் பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்துள்ளாா். இவா்களை, குன்னம் சட்டப்பரேவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலருமான ந. சக்திவேல் பாராட்டி அவா்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா்.
இந்நிகழ்ச்சிகளில், தோ்தல் வட்டாட்சியா் அருளானந்தம், உதவி வாக்காளா் பதிவு அலுவலரும், பெரம்பலூா் வட்டாட்சியருமான பாலசுப்ரமணியன், உதவி வாக்காளா் பதிவு அலுவலரும், குன்னம் வட்டாட்சியருமான சின்னதுரை ஆகியோா் உடனிருந்தனா்.

