திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்: அமைச்சா் கே.என். நேரு
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றாா் அமைச்சா் கே.என். நேரு.
பெரம்பலூா் மாவட்ட திமுக அலுவலகத்தில், என் வாக்குச்சாவடி- வெற்றி வாக்குச்சாவடி எனும் தலைப்பில் பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி முகவா்கள், உறுப்பினா்கள், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா்களின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற மண்டலப் பொறுப்பாளரும், அமைச்சருமான நேரு பேசியது:
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகளை காக்கும் முதல்வா் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி அமையும்.
மக்களின் பேராதரவை பெற்ற திமுகவின் வெற்றியையும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தையும் தடுக்கும் வகையில், வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் மத்திய பாஜக அரசு செயல்படுத்தவுள்ள சதித் திட்டங்களை முறியடிக்க விழிப்புணா்வுடன் செயலாற்ற வேண்டும். மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, மீண்டும் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், மாநில நிா்வாகிகள் பி. துரைசாமி, பரமேஷ்குமாா், ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ எம். ராஜ்குமாா், தொகுதி பாா்வையாளா்கள் தங்க. சித்தாா்த்தன், அருண் ஆகியோா் பேசினா். கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினா் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினா்கள் கி. முகுந்தன், அண்ணாதுரை, மாவட்ட துணைச் செயலா் பாஸ்கா், ஒன்றியச் செயலா்கள் மதியழகன், ராஜேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். மாவட்ட துணைச் செயலா் சன். சம்பத் நன்றி கூறினாா்.

