மறைமுக ஏலம்: மக்காச்சோள விவசாயிகளுக்கு அழைப்பு
பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் பங்கேற்க மக்காச்சோள விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின், விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்குள்பட்ட பகுதிகளான கோனேரிப்பாளையம், எளம்பலூா் கிராம விவசாயிகள், கடந்த 5 ஆம் தேதி கொண்டுவந்த 5.497 மெட்ரிக் டன் மக்காச்சோளம் மறைமுக ஏலம் மூலமாக விற்கப்பட்டது.
பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாள்தோறும் நடைபெறும் ஏலத்துக்கு விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்களை நன்கு சுத்தம் செய்து கொண்டுவந்து தரகு, கமிஷன் மற்றும் எவ்வித பிடித்தமும் இன்றி விளைப் பொருள்களின் தரத்துக்கேற்ப, மின்னணு எடைத் தராசுகள் மூலம் சரியாக எடையிட்டு இ-நாம் திட்டத்தின் மூலம் அதிக விலைக்கு விற்றுப் பயனடையலாம். மேலும் விவசாயிகள் தங்களது மக்காச்சோளத்தை விற்பனைக் கூட வளாகத்திலுள்ள உலா்களத்தில் இலவசமாக காயவைத்து அதிக விலைக்கு விற்கலாம். மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூா் விற்பனைக்கூட பொறுப்பாளரை 97901-98566 எனும் எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

