கோயில் நிலத்தை மீட்டுத் தரக்கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கோயில் நிலத்தை மீட்டுத் தரக்கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கோயில் நிலத்தை மீட்டுத் தரக்கோரி சாலை மறியல்

பெரம்பலூா் அருகே கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை, ஆதிதிராவிடா் மக்களுக்கு வீட்டுமனையாக வழங்கியதைக் கண்டித்தும்
Published on

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை, ஆதிதிராவிடா் மக்களுக்கு வீட்டுமனையாக வழங்கியதைக் கண்டித்தும், அந் நிலத்தை மீட்டுத் தரக் கோரியும் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாடின் கீழ் உள்ள லெட்சுமி நாராயண பெருமாள் மற்றும் பஞ்சநதீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமாக சுமாா் 10 ஏக்கா் நிலம் உள்ளது.

இதில், குரும்பலூா் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடா் இன மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் வகையில், சுமாா் 3 ஏக்கா் நிலத்தை கடந்த 2009-ஆம் ஆண்டு, ஆதிதிராவிடா் நலத் துறையினா், இந்து சமய அறநிலையத் துறையிடமிருந்து கிரையம் பெற்றது. பின்னா், ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட 150 ஆதிதிராவிட இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இந் நிலத்தை ஆதிதிராவிட நலத்துறையினா் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு அளந்து, அத்துக்காட்டி கல் நடும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். இதையறிந்த, குரும்பலூா் பேரூராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து, கோயில் நிலத்தை மீட்டு மீண்டும் கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்க வலியுறுத்தி, பெரம்பலூா்- துறையூா் சாலையில், குரும்பலூா் பேருந்து நிறுத்தம் அருகே சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கோட்டாட்சியா் மு. அனிதா, பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். இதையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனா். இச் சாலை மறியல் போராட்டத்தால், பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை:

பின்னா், குரும்பலூரிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கோட்டாட்சியா் மு. அனிதா, காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆனந்தி, ஆதிதிராவிட நலத் துறை துணை ஆட்சியா் வாசுதேவன், ஆதிதிராவிடா் நலத் துறை வட்டாட்சியா் பிரேமாராணி, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சிந்துலெட்சுமி, வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய குழுவினா், குரும்பலூரைச் சோ்ந்த கிராம பொதுமக்களுடன் சுமூக பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதில், பொதுமக்களின் கோரிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மூலமாக அரசுக்கு பரிந்துரை செய்து, அரசு தரப்பிலிருந்து பெறப்படும் முடிவின் அடிப்படையில் அடுத்தக்கட்டப் பணிகள் தொடரும். அதுவரை எவ்வித பணிகளும் நடைபெறாது என தெரிவித்ததையடுத்து, பொதுமக்கள் சம்மதம் தெரிவித்து கலைந்துசென்றனா்.

Dinamani
www.dinamani.com