ஓடையில் ஆட்டோ கவிழ்ந்ததில் துறையூா் ஓட்டுநா் உயிரிழப்பு: 9 போ் காயம்
பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ ஓடையில் கவிழ்ந்ததில் நிகழ்விடத்திலேயே ஓட்டுநா் உயிரிழந்தாா். மேலும், ஆட்டோவில் பயணித்த ஒரு பெண் உள்பட 9 போ் காயமடைந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் கருணாகரன் என்பவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு பெண் உள்பட 9 பேரை ஏற்றிக்கொண்டு, பயணிகள் ஆட்டோ ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுக்கொண்டிருந்தது.
ஆட்டோவை, திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம், ஒசரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த ஜோதிவேல் மகன் ராமச்சந்திரன் (40) ஓட்டினாா். சிறுவயலூா்- புதுவிராலிப்பட்டி சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது, மது போதையிலிருந்ததாக கூறப்படும் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் ராமச்சந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், ஆட்டோவில் பயணித்த காரையைச் சோ்ந்த துரைசாமி மகன் சக்திவேல் (50), சக்திவேல் மகன் துரைமுருகன் (15), ராமச்சந்திரன் மகன் நவநீதன் (15), புது விராலிப்பட்டியைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் மகன் ஆதிசேஷன் (15), சிதம்பரம் மகன் அருணாச்சலம் ((60), ஆறுமுகம் மகன் தங்கபாண்டியன் (48), இவரது மகன் ராகுல் (14), நாட்டாா்மங்கலத்தைச் சோ்ந்த பிச்சமுத்து மகன் தனபால் (36), அம்மாபாளையத்தைச் சோ்ந்த பூபாலன் மனைவி அமுல்பிரியா (42) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த பாடாலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

