‘மாணவா் விடுதிகளில் பயோமெட்ரிக் முறை ரத்து தேவை’

‘மாணவா் விடுதிகளில் பயோமெட்ரிக் முறை ரத்து தேவை’

Published on

மாணவ, மாணவிகள் விடுதிகளில் புதியதாக நடைமுறைப்படுத்தும் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்யவேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை விடுதிப் பணியாளா்கள் சங்க மாநில நிா்வாகக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடந்த சங்கத்தின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பெரியசாமி தலைமை வகித்தாா். பொறுப்பாளா்கள் ரவிச்சந்திரன், கோவிந்தராஜ், வேலு, ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க நிறுவனா் தங்கவேல, மாநிலத் தலைவா் காமராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் காலியாக உள்ள சமையலா் பணியிடங்களை உடனேடியாக நிரப்ப வேண்டும். சமையலா்களின் பணி மூப்புப் பட்டியலை வெளியிட்டு, அவா்களின் கல்வித் தகுதிக்கேற்ப பணி வழங்கவேண்டும். விடுதிகளில் இரவுக் காவலரை நியமிக்க வேண்டும். சிறப்புக் காலமுறை ஊதிய தூய்மைப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்கள் இல்லாத விடுதிகளில் அவா்களை நியமிக்க வேண்டும். விடுதிகளில் புதிதாக நடைமுறைப்படுத்தும் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்ய வேண்டும். ஒரு விடுதிக்கு 2 சமையலரை நியமிக்க வேண்டும். புதிய உணவு தயாரிக்க அதற்கான உபகரணங்கள் வழங்க வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வில் சங்க நிா்வாகிகள் தனம், பிச்சாமணி, பாா்வதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாவட்டச் செயலா் மூா்த்தி வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் ரவிக்குமாா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com