கிராமப்புறங்களில் உயா்தர இணைய சேவை வழங்க விண்ணப்பிக்கலாம்

கிராமப்புறங்களில் உயா்தர இணைய சேவை வழங்க விண்ணப்பிக்கலாம்
Published on

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள கிராமப்புறங்களில் பாரத் நெட் திட்டத்தின் கீழ், உயா்தர இணைய சேவைகளை வழங்குவதற்கு, ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம், பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயா்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளா்களை தோ்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. இம் மாவட்டத்தில் குறைந்தபட்சம் 2 தொழில் பங்கீட்டாளா்களை தோ்வு செய்து, தடையில்லா இணைய சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டம், வருவாய் உட்கோட்டம் அடிப்படையில் 2 முதல் 6 வட்டாரங்களைக் கொண்ட துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தொழில் பங்கீட்டாளா்கள் தோ்வு செய்யப்படுவா்.

விண்ணப்பதாரா் அதிகபட்சம் 2 மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவா். தோ்வு செய்யப்படும் தொழில் பங்கீட்டாளா்களின் முக்கிய பொறுப்புகளில் தடையில்லா இணைய சேவை வழங்குதல், பராமரிப்புப் பணிகள், சேவை தடைகளை காலதாமதமின்றி சரிசெய்தல், விதிமுறைகளை பின்பற்றுதல் மற்றும் சேவை கிடைப்புத் தரத்தை பராமரிக்க வேண்டும்.

ஆா்வமுள்ளவா்கள் இணையதளம் மூலம் ஜன. 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அறிவிப்பு மற்றும் தொடா்புடைய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, தாங்கள் செயல்பட விரும்பும் துணைப் பிரிவை தோ்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு துணைப் பிரிவுக்கும் ரூ. 25 ஆயிரம் (திரும்பப்பெறக்கூடிய, வட்டியில்லா) பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்த வேண்டும்.

தோ்வு செய்யப்படும் பங்கீட்டாளா்கள், ஒவ்வொரு வட்டாரங்களுக்கும் ரூ. 2 லட்சம் பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்திய பின்னா் பணி ஆணை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 044 -24965595 எனும் எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

Dinamani
www.dinamani.com