அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

பெரம்பலூரில் சூறாவளிக் காற்றுடன் கன மழை! பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழை, மக்காச்சோளம் சேதம்!

News image

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள் மற்றும் மக்காச்சோளப் பயிா்கள்.

Updated On :3 மே 2026, 6:59 pm

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மாலை பலத்தக் காற்றுடன் பரவலாக மழை பெய்தது. மழையைத் தொடா்ந்து வீசிய சூறாவளிக் காற்றில் ஏராளமான ஊா்களில் வாழை மரங்களும், மக்காச்சோளப் பயிா்களும் சாய்ந்தன. இதனால், விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. குறிப்பாக, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக 105 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் பரவலாக மழை பெய்தது. சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன.

பெரம்பலூா் அருகேயுள்ள எறைய சமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஆனந்தன் (40), தனது வயலில் உள்ள மா மரத்தின் கீழ் சனிக்கிழமை மாலை மாடுகளை கட்டிவைத்திருந்தாா். அப்போது வீசிய சூறாவளிக் காற்றில் மரம் கீழே விழுந்ததில் உடல் நசுங்கி பசு மாடு ஒன்று நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

வாழை மரங்கள், மா பிஞ்சுகள் சேதம்:

பலத்த சூறாவளி காற்றின் காரணமாக, வேப்பந்தட்டை அருகேயுள்ள அன்னமங்கலம், அரசலூா், விசுவக்குடி , பூஞ்சோலை, மூலக்காடு, தொண்டமாந்துறை, மலையாளப்பட்டி, அ.மேட்டூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

இதேபோல, அதே பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மா மரங்களிலிருந்த பிஞ்சுகள் மற்றும் காய்கள் காற்றில் சிதறி தரையில் கொட்டியது. ஏற்கெனவே கடுமையான வெப்பத்தால் பூக்கள் கருகி மிகக் குறைந்த அளவிலேயே காய்பிடித்திருந்த நிலையில், தற்போது வீசிய சூறாவளி காற்றில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

மக்காச்சோளம் சேதம்:

மேலும், வேப்பந்தட்டை பகுதியில் கோடைப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காசோளப் பயிா்களில் கதிா் வந்திருந்த நிலையில், காற்றில் சாய்ந்துள்ளதால் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

எனவே, வருவாய்த் துறையினா் மூலம் பாதிப்புக்குள்ளான பயிா்களை கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பலத்த சூறாவளி காற்றால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிகிழமை இரவு வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்):

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி வரை பதிவான மழையளவு.

பெரம்பலூா்- 30, வி.களத்தூா்- 12, கிருஷ்ணாபுரம்- 2, தழுதாழை- 14, வேப்பந்தட்டை -10, அகரம் சீகூா்- 1, பாடாலூா் - 11, செட்டிகுளம் -13 என 93 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள் மற்றும் மக்காச்சோளப் பயிா்கள்.

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள் மற்றும் மக்காச்சோளப் பயிா்கள்.