புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பேரையூரில் உள்ள அருள்மிகு நாகநாதசுவாமி, பிரஹதாம்பாள் கோவில் பங்குனித் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோவிலில் பங்குனித் திருவிழா கடந்த (ஏப். 5) வெள்ளிக்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. ஏப். 14 -ம் தேதி வரை நடைபெறும் திருவிழாவில் தினமும் மண்டகப்படிதாரர்களின் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில், 9-ம் நாளான சனிக்கிழமை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில், திருமயம் எம்எல்ஏ பி.கே. வைரமுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். தமிழ்ச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர். ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத் துறை நிர்வாக அலுவலர் ஜெகநாதன், மேற்பார்வையாளர் சீனிசேதுராமன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.