வெண்ணாவல்குடி அரசுப் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், வெண்ணாவல்குடி அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம், அதன் தலைவர் வெ.ம. மனோகரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பள்ளி ஆண்டு விழாவின்போது பெற்றோர் ஆசிரியர் கழகம் விடுத்த கோரிக்கையை ஏற்று பள்ளியில் ஆழ்க்குழாய் கிணறு அமைக்க ரூ. 4 லட்சம் நிதி ஒதுக்கிய திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் துரை. தனசேகரனுக்கு நன்றி.
பள்ளி மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வந்து செல்ல புதுகையிலிருந்து காலை 8.15-க்கு குளவாய்ப்பட்டி, வெண்ணாவல்குடி வழியாக ஆலங்குடிக்கும், அதேபோல, ஆலங்குடியிலிருந்து மாலை 4.15-க்கு வெண்ணாவல்குடி, குளவாய்ப்பட்டி வழியாக புதுக்கோட்டைக்கும் புதிய பேருந்தை இயக்க ஆலங்குடி எம்எல்ஏ கு.ப. கிருஷ்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முழுமையாகக் கட்டப்படாமல் உள்ள சுமார் 180 மீ. நீளமுள்ள சுற்றுச்சுவரை அமைக்க சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரத்துக்கு மீண்டும் கோரிக்கை மனு அனுப்புவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நிர்வாகிகள் முத்துவீரன், தங்கராசு, அய்யாவு, பள்ளித் தலைமை ஆசிரியர் தி. மனோன்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.