புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது .
புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டினத்தார்கள் பாடிய திருத்தலம், குருபகவானுக்கு பொன்னன் என்ற பெயர் உருவான திருத்தலம், முக்கிய சிவாலயங்களில் ஒன்றாக விளங்கும் இலுப்பூர் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதே போல் நிகழாண்டுக்கான திருவிழா இம்மாதம் 3 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து தினமும் சுவாமி, அம்பாள் தனது பரிவார தெய்வங்களுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அமர்ந்து வீதி உலாக்காட்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தோரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து, திங்கள்கிழமை மாலையில் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.