புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் காவேரி நகரில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்தரையர் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வரலாற்றுத் துறையைச் சோóந்த பேராசிரியர் அ. சந்திரபோஸ், தமிழியல் துறை பேராசிரியர் இரா. கருப்பையா ஆகியோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுக்கோட்டை அருகே காவேரி நகர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட போது சாலையோரம் கிடந்த இக்கல்வெட்டைப் பார்த்தோம். சுமார் மூன்றடி உயரம் உடைய இக்கல்லில் மீநவந் முத்தரையர் ஊர் (ந)டுங்குடி இர(ண்)டு கரை நாட்டு மறமாணிக்கா பெ(ரு)ந் மாணிக்க நல்லூர் என்ற வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இது ஒரு எல்லைக்கல் போன்று தோற்றமளிக்கிறது.
பொன்மாணிக்கநல்லூர் என்ற ஊரில் இரண்டு கரை நாட்டு மறமாணிக்கார் தீர்மானித்தபடி நடப்பட்ட எல்லைக்கல் என்று பொருள் கொள்ளலாம். தற்போது காவேரி நகர் என்று அழைக்கப்படும் ஊரின் ஒரு பகுதி கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் நெடுங்குடி என்றும் மற்றொரு பகுதி பொன்மாணிக்கநல்லூர் என்றும் அழைக்கப்பட்டிருந்தது எனக் கருதலாம்.
இவ்விரு ஊர்களின் எல்லையாக இக்கல் நடப்பட்டிருக்கக்கூடும். மேலும் மீனவன் முத்தரையன் பற்றிய முதல் கல்வெட்டாக இது உள்ளது. பாண்டியர், முத்தரையர் தொடர்பைக் காட்டுவதாக கல்வெட்டில் வரும் பெயர் உள்ளது.
நார்த்தாமலைக் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளவாறு, பல்லவ மன்னன் நிருபதுங்கனின் (கி.பி. 859-899) சமகாலத்தவனான சாத்தன் பழியிழியின் மகள் பழியிழி சிறியநங்கையைத் திருமணம் செய்து கொண்ட மீனவன் தமிழ்தியரையன் என்ற முத்தரையனின் வழி வந்தவனாக
இந்த மீனவன் முத்தரையன் இருக்கலாம்.