மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெற்ற வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் சார்பில் புதுகையில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் ஏராளமான படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில், எளிதில் குளிரூட்டுவது குறித்து வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆர்.வசந்தன், ஆர்.சதீஸ்குமார் ஆகியோரது படைப்பு முதலிடம் பிடித்தது.
இதையடுத்து, மாணவர்கள், வழிகாட்டி ஆசிரியர் எஸ்.சந்திரபோஸ் உள்ளிட்டோரை ஆட்சியர் சு.கணேஷ், பள்ளிக் கல்வி துறை அலுவலர்கள் ஆகியோர் பாராட்டினர். இந்நிலையில், வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் சி.பால்ராஜ் தலைமை வகித்தார். இதில், மாணவர்கள் இருவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.