புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே குடிபோதையில் தாயையும் சகோதரியையும் தாக்கிய தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
அறந்தாங்கி ஒன்றியம் நாகுடி அருகே இடையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (42). விவசாயக் கூலி. இவரது மகன் சித்திரவேல்(17). இந்நிலையில், செவ்வாய்க்கிழமை குடிபோதையில் இருந்த கணேசன் தனது மனைவி மற்றும் தனது மகளிடம் தகராறு செய்துள்ளார். இதைத் தட்டிக்கேட்ட மகன் சித்திரவேலுவை கட்டையால் தாக்க முயன்றபோது அவரை திருப்பித் தாக்கியதில் பலத்த காயமடைந்த கணேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். சித்திரவேலு மீது வழக்கு பதிவு செய்த நாகுடி போலீஸார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.