புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள முள்ளங்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டம் நடைபெற்றது.
கறம்பக்குடி அருகேயுள்ள முள்ளங்குறிச்சி ஊராட்சியில் சுமார் 1,500 பேர் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு அத்திட்டத்தில் இருந்து முறையாக வேலை வழங்குவது இல்லையாம். மேலும், வேலை செய்திருந்த பலருக்கு சம்பளமும் வழங்கவில்லையாம்.
இந்நிலையில்,ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியும் முள்ளங்குறிச்சி ஊராட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குறட்டை விட்டு தூங்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் முன்னாள் மாவட்டச்செயலர் த.செங்கோடன், ஒன்றியச் செயலாளர் ஜேசுராஜ், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.கே. ஆரோக்கியசாமி மற்றும் 200 -க்கும் மேற்பட்ட தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
போராட்டம் தொடங்கி நீண்ட நேரமாகியும் அலுவலர்கள் யாரும் வரவில்லை. இதனால் விரக்தி அடைந்த மக்கள், அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, அங்கு சென்ற ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், கறம்பக்குடி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.