தமிழக அரசின் அரசாணைப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 24 மணி நேரமும் பணியாற்றும் நிறுவனங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ், தொழிலாளர் துறை உதவி ஆணையர் ஆர். சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அரசுத்துறை அலுவலர்கள், புதுக்கோட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பங்கேற்றனர். அரசாணைப்படி 24 மணி நேரமும் தொழிலகங்களைச் செயல்பட அனுமதிக்கும்போது, அதற்கான பணி வரையறைகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தொழிலக உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்படுமெனில், அது தொடர்பாக விசாரணை நடத்தும் தனிக்குழுவையும் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.