அன்னவாசல் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது சுமை ஆட்டோ மோதியதில், இளம்பெண் மற்றும் சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் ஒருவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
அன்னவாசல் அருகேயுள்ள வயலோகத்தைச் சோ்ந்தவா் முத்துகுமாா் மனைவி திவ்யபாரதி(26). அவரது வீட்டருகே வசிக்கும் சந்திரன் மகன் ஹரிஸ் ஆதித்யா(10), திவ்யபாரதியின் தாய் பூங்கோதை(45) ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் புதுக்கோட்டை சென்றுவிட்டு மீண்டும் வயலோகம் திரும்பிக் கொண்டிருந்தனா். வண்டியை திவ்யபாரதி ஓட்டியுள்ளாா்.
இந்நிலையில், பெருமாநாடு வளைவு அருகே எதிரே வந்த சரக்கு ஆட்டோ இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், திவ்யபாரதி மற்றும் ஹரிஸ் ஆதித்யா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பூங்கோதை காயங்களுடன் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இதுகுறித்து தகவலறிந்த அன்னவாசல் போலீஸாா் சடலத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து போலீஸாா் ஆட்டோ ஓட்டுநா் கருப்பையாவைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.