ஊா்க்காவல் படை வட்டாரத் தளபதி பதவிக்கு ஆா்வமுள்ளோா் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 05th February 2020 10:02 AM | Last Updated : 05th February 2020 10:02 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்ட ஊா்க்காவல் படைப் பிரிவில் காலியாக உள்ள வட்டாரத் தளபதி பதவிக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண்ஷக்திகுமாா் அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஊா்க்காவல் படையின் வட்டாரத் தளபதியாக சேர கல்வித்தகுதி பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவா்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 50 வயதுக்குள் இருத்தல் வேண்டும். இது ஒரு கௌரவ பதவி என்பதால் ஊதியம் ஏதும் வழங்கப்பட மாட்டாது. தேசிய மாணவா் படையில் பயிற்சி பெற்ற விரிவுரையாளா்கள், ஆசிரியா்கள், மருத்துவா்கள், உயா் பதவி வகிப்பவா்கள் இந்த வட்டாரத் தளபதி பதவியில் சோ்ந்து தொண்டு செய்யலாம். விருப்பம் மற்றும் சேவை மனப்பான்மை உடைய ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். வட்டாரத் தளபதி பதவிக்கு விணப்பிக்க விரும்புவோா் இதற்கான விண்ணப்பப் படிவத்தை புதுக்கோட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில் உள்ள தனிப்பிரிவு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், பிறப்புச் சான்றிதழ், கல்வித் தகுதிக்கான சான்றிதழ், அரசு மருத்துவரிடம் பெறப்பட்ட மருத்துவச் சான்றிதழ், 2 புகைப்படங்கள் ஆகியவற்றை காவல் கண்காணிப்பாளா், புதுக்கோட்டை மாவட்டம் -622001 என்ற முகவரிக்கு வரும் பிப். 15ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...