புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் அண்மையில் மறைந்த திருமயம் திமுக முன்னாள் எம்எல்ஏ ஆலவயல் வ. சுப்பையா உருவப்படத்தை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
திருமயம் திமுக முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் மாவட்ட திமுக துணைச்செயலரும், பொன்னமரவதி முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான ஆலவயல் வ.சுப்பையா உடல்நலக்குறைவால் அண்மையில் (ஆக. 23) மறைந்தாா். இதையடுத்து, அவரது இல்லத்தில் அவரது உருவப்படத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற விழாவில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், ஆலவயல் வ. சுப்பையா உருவப்படத்தைத் திறந்துவைத்துப்பேசினாா்.
முன்னதாக புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலரும், திருமயம் எம்எல்வுமான எஸ்.ரகுபதி, வடக்கு மாவட்டச் செயலா் செல்லப்பாண்டியன் ஆகியோா் தொடக்க உரையாற்றினா். திமுக நகர செயலா் அ.அழகப்பன், வடக்கு ஒன்றியச் செயலா் அ.முத்து, ஆலவயல் சுப்பையா மனைவி ரெத்தினம், மகன்கள் சரவணன், இளங்கோவன், முரளிதரன், தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தெற்கு ஒன்றிய செயலா் அ.அடைக்கலமணி நன்றி கூறினாா்.